பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்த போராட்டம்

தனது கணவனை விடுதலைசெய்யக்கோரி இன்று காலை தொடக்கம் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுவந்த ஐந்து பிள்ளையின் தாயின் போராட்டம் பொலிஸாரின் தலையீட்டினால் இன்று இரவு 10.00மணியளவில் நிறைவுக்கு வந்தது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் தாய் ஒருவர் தனது கணவனை விடுதலைசெய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டுவந்தார்.

கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அஜந்தன் எனப்படும் சி.இராஜகுமாரனின் மனைவி பிள்ளைகளுடன் இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்.

தனது கணவன் கைதுசெய்யப்பட்டு 18 தினங்களை கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தாத நிலையில் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தனது கணவரை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியே குறித்த தாய் மற்றும் பிள்ளைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

தனது கணவர் எந்தக்குற்றமும் செய்யவில்லை.அதனை பொலிஸாரும் கூறுகின்றனர்.ஆனால் அவரை ஏன் தொடர்ந்து தடுத்துவைத்துள்ளார்கள் என்பது தெரியாத நிலையில் உள்ளதாக உண்ணாவிரததத்தில் ஈடுபட்டுள்ள திருமதி செல்வராணி இராஜகுமாரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று இரவு மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி டி.ஹகவத்துற போராட்டஈடுபட்டுள்ள பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

கைக்குழந்தை உட்பட ஐந்து வயதுக்கும் குறைந்த வயதுடைய குழதைகளை வீதியில் போட்டு போராடுவது குறித்த குழந்தைகளின் உரிமையினை மீறும் செயல் அத்துடன் குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமானால் அதற்கான பொறுப்பினை தாய் ஏற்றுக்கொள்ளவேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கைதுசெய்யப்பட்டவர் தொடர்பிலான விசாரணைகள் சென்றுகொண்டிருக்கின்றது.விசாரணை நிறைவுபெற்றதுடம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் அவர் எந்த குற்றமும் செய்திருக்காவிட்டால் விடுதலைசெய்யப்படுவார் எமது சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது தனது உண்ணாவிரத போராட்டத்தினை நிறைவுசெய்வதாகவும் ஆனால் தனது கணவர் நிரபராதியாகவுள்ளதனால் அவரை விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவ்வாறு செய்யாதுவிட்டால் தான் வேறு முடிவுகளை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவேன் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்த திருமதி செல்வராணி இராஜகுமாரன் தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,மாநகரசபை உறுப்பினர் செல்வி மனோகர்,திருமதி சுஜீதா,சர்வமத ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தினை நிறைவுசெய்தவர்கள் மட்டக்களப்பு மாநகரசபையின் வாகனத்தில் அவர்களின் கிராமத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.