மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதிய மாணவர்கள் முற்றுகை போராட்டம் -சுகாதார அமைச்சின் உறுதிமொழியால் கைவிடப்பட்டது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதிய பயிற்சி கல்லூரி பயிற்சி தாதியர்கள் போதனா வைத்தியசாலையின் நிர்வாக கட்டிட தொகுதியை முற்றுகையிட்டு இன்று காலை நடாத்திய போராட்டம் சுகாதார அமைச்சின் விரைவான நடவடிக்கையினால் கைவிடப்பட்டது.

தாதிய போதனாசிரியர் ஒருவரின் செயற்பாட்டினை கண்டித்தும் அவரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தியும் இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்வாக கட்டிடத்தினை முற்றுகையிட்டு தாதிய மாணவர்கள் போராட்டத்தினை நடாத்தினர்.

தாதிய பயிற்சி கல்லூரியின் குறித்த போதனாசிரியர் மாணவர்கள் நவராத்திரி நிகழ்வினை நடாத்த முற்பட்டபோது அதற்கு எதிராக பேசியதுடன் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும் தமது நவராத்திரி நிகழ்வுக்கு தடைகளை குறித்த போதனாசிரியர் ஏற்படுத்தியதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையிலேயே அனைத்து இன மாணவர்களும் கற்கும் ஒரேயொரு தாதிய பயிற்சி கல்லூரியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய கல்லூரி உள்ள நிலையில் அதற்குள் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் குறித்த தாதிய செயற்படுவதாகவும் தாதிய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மாணவர்களையும் போதனாசிரியர்களையும் அதன் அதிபரையும் மோசமான வார்த்தைகளினால் பேசுவதாகவும் மாணவர்களை கீழ்தரமான முறையில் நடாத்துவதாகவும் தாதிய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கடந்த காலத்தில் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டபோதிலும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனவும் மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலையும் 23 மாணவர்களை வலுக்கட்டாயமாக அறையொன்றில் குறித்த தாதிய போதனாசிரியர் பூட்டிவைத்திருந்ததாகவும் அவர்களை தாங்கள் மீட்டதாகவும் தாதிய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த போதனாசிரியர்கள் தமக்கு அச்சுறுத்தலாகவே இருந்துவருவதாகவும் தமக்கான கல்வி நடவடிக்கைகளை அவர் சரியான முறையில் செய்வதில்லையெனவும் தெரிவிக்கும் மாணவர்கள் குறித்த போதனாசிரியரை கல்லூரியில் இருந்து மாற்றம் செய்யும் வரையில் தாங்கள் இனி கல்லூரிக்கு செல்லப்போவதில்லையெனவும் தெரிவித்தனர்.

இதேநேரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சனி கணேஸ் தலைமையில் விசேட கூட்டம் நடைபெற்றது.

இதில் தாதிய பயிற்சி உத்தியோகத்தர்கள்,பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் சார்பாக அவரின் இணைப்புச்செயலாளரும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினருமான றொஸ்மன்,பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் முரளி ஆகியோர் பங்குகொண்டனர்.

குறித்த போதனாசிரியருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கையெடுக்கப்படும் என அமைச்சு உறுதியளித்துள்ளதாகவும் போராட்டத்தினை கைவிடுமாறும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சனி கணேஸ் தாதிய மாணவர்களிடம் கோரிக்கை விடுத்தபோதிலும் குறித்த போதனாசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யும்வரையில் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சுகாதார அமைச்சினால் குறித்த தாதிய போதனாசிரியருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து தாதிய மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.