பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலய திருச்சடங்கு ஆரம்பம்

கிழக்கிலங்கையின் மிகவும் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு நேற்று சனிக்கிழமை மாலை கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

நேற்று மாலை பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து அம்பாள் எழுந்தருளச்செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு திருக்கதவு திறக்கப்பட்டது.

பெருமளவான அடியார்கள் கற்பூரச்சட்டி ஏந்திவர பறை மேளங்கள் முழங்க அம்பாள் பண்பாட்டு விழுமியங்களுடன் கொண்டுசெல்லும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து அம்பாள் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்ற ஆலய திருக்கதவு திறத்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் வாழைக்காய் எழுதருளச்செய்யப்பட்டு தேவாதிகளுடன் ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுசெல்லும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

நாளை திங்கட்கிழமை மாலை அம்பாளின் முத்துச்சப்புர பவனியும் ஊர்காவலும் நடைபெறவுள்ளதுடன் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை மாபெரும் சக்தி மகா யாகம் நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினம் மாலை நோற்பு கட்டுதலும் கடற்குளிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.

புதன்கிழமை காலை அம்பாளின் மிகமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான தீமிதிப்பு உற்சவம் நடைபெறவுள்ளதுடன் அதனை தொடர்ந்து சக்தி பூஜையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.