மட்டக்களப்பு மாநகரசபையினால் “வருமானவரி அறிவீட்டு” மாதம் பிரகடணம்…



செப்டெம்பர் மாதத்தினை மட்டக்களப்பு மாநகரசபையானது “வருமானவரி அறிவீட்டு” மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளது. மாநகரசபைக்குட்பட்ட 20 வட்டார மக்களுக்கும் துரித அபிவிருத்திகளை மேற்கொள்ளும் நோக்கோடு, இதுவரையில் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள ஆதனவரி, வியாபார வரி, மற்றும் ஏனைய வரி நிலுவைகளை அறவிடுவதற்காகவே இப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆசியா மன்றத்தின் அனுசரனையில் இடம்பெறும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது நேற்று மாநகர சபையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் ந.மணிவண்ணன், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், ஆசிய மன்றப் பணிப்பாளர் கோபுதம்பி குமார், சிரேஸ்ட ஆலோசகர் ஜெயதிஸ்ஸ, நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் சசிகரன், மாநகர ஊழியர்கள் மற்றும் வரியிறுப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாநகர முதல்வரால் வருமானவரி அறிவீட்டு மாதத்திற்கான பிரகடனம் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 20 வட்டாரங்களுக்கும் 10 குழுக்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, அவர்களிற்கான பணிகளும் பொறுப்பளிக்கப்பட்டன.

இந்த வருமானவரி அறிவீட்டு மாதத்தில், முதலாம் வாரம் வரி அறவீட்டுக்கான விழிப்புணர்வு வாரமாகவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரங்கள் வீடுகள், மற்றும் வியாபார நிலையங்களுக்கு சென்று வரி அறவீடு செய்யும் வாரமாகவும், இறுதி வாரம் வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாரமாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நிறைவில் சிறந்த வரி செலுத்துனர்கள், சிறந்த வரி வசூலிப்பாளர்கள், சிறந்த வரி வசூலிப்புக் குழு என்பன தெரிவு செய்யப்பட்டு கொளரவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.