:இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்ட பிரதேசக் கிளைகளைப் புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்…




இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேசக் கிளைகளைப் புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட, பிரதேசக் கிளைகளைப் புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு இன்று (29) மட்டக்களப்பு தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா கலந்துகொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் சிரேஸ்ட உபதலைவருமான பொன்.செல்வராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளையின் தலைவருமான பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அதிகாரசபைகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபைத் தலைவர்கள், உபதலைவர்கள் என்போர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆனி மாதம் முல்லைத்தீவில் இடம்பெற்ற மத்திய செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய கட்சியின் கிளைகளைப் புனரமைப்பது தொடர்பில் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அவ்வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் குழுவினுடைய கலந்துரையாடல் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கட்சியின் செயற்பாடுகள், உள்ளுர் அதிகார சபைத் தேர்தலில் முகங்கொடுக்க நேரிட்ட சவால்கள் பற்றி கட்சியின் தலைவரால் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கட்சியின் பிரதேசக் கிளைகளைப் புனரமைப்பது மற்றும் அதற்கான தினங்களை நியமிப்பது தொடர்பிலான பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.