12வருடங்களுக்கு பின்னர் மீண்டும் மட்டக்களப்பில் களைகட்டும் தியேட்டர்

மட்டக்களப்பு மாநகரில் 12வருடங்களுக்கு பின்னர் சினிமாத்துறை இரசிகர்களினை கருத்தில் கொண்டு படமாளிகை திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சினிமா இரசிகர்களை தன்னகத்தே கொண்டிருந்த மட்டக்களப்பு விஜயா படமாளிகை கடந்த கால யுத்த சூழ்நிலையினால் கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்தது.

இதன்காரணமாக மட்டக்களப்பு நகரில் உள்ள சினிமாத்துறை இரசிகர்கள் செங்கலடி மற்றும் கல்லடி பகுதியை நோக்கியே செல்லவேண்டிய நிலையிருந்தது.

எனினும் தற்போது மட்டக்களப்பு நகரில் நவீன வகையில் புனரமைக்கப்பட்டு விஜயா படமாளிகை இன்று வெள்ளிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.

ஆர்எப்.பிலிம்ஸின் முழுமையான பங்களிப்புடன் இந்த படமாளிகை புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விஜயா படமாளிகையின் உரிமையாளர் ஜி.பத்மநாதன் மற்றும் ஆர்எப்.பிலிம்ஸின் பணிப்பாளர் ரொஹான் பின்கடுவ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மக்கள் பூரண ஆதரவினை வழங்குவதன் மூலமே இந்த படமாளிகையினை தொடர்ந்து முன்கொண்டுசெல்லமுடியும் என விஜயா படமாளிகையின் உரிமையாளர் ஜி.பத்மநாதன் தெரிவித்தார்.

இந்த படமாளிகையின் திறப்பு விழாவின் ஆரம்ப படமாக இரும்புத்திரை படம் திரையிடப்பட்டுள்ளதுடன் இன்றைய நிகழ்வில் பெருமளவான இரசிகர்களும் கலந்துகொண்டனர்.