மட்டக்களப்பில் நுண்டனால் 17பேர் தற்கொலை –வீதிக்கு இறங்கிய மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள நுண்கடன் திட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு கோரி, மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் இன்று (12) காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.

வந்தாறுமூலை பொதுமக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு பேரணியானது அம்பலத்தடி, நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி, சந்தை வரை சென்று, மீண்டும் நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் முடிவடைந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் ஓரத்தில் நின்று தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களையெழுப்பினர்.

“மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை நுண்கடனைத் திப்பிச் செலுத்த முடியாமை காரணமாக 17 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதனைத் தவிர குடும்பகளில் விரிசல், சமூக சீர்கேடுகள், நுண்கடன் பெற்ற பலர் மன உளைச்சாலுக்கு உள்ளான சம்பவங்களும் பல காணப்படுகின்றன” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், “நுண்கடன் நிறுவனங்கள் கடன் வழங்கும் போது உரிய செயற்றிட்டத்தை ஆராய்ந்த பின்னரே, கடன்களை வழங்க வேண்டும்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கோரிக்கைகள் அடங்கிய மகஜர், ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் அவர்களிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.