மட்டக்களப்பு மாநகரசபையின் அதிகாரங்களை சூழ்ச்சிகளை முறியடித்து கைப்பற்றியது தமிழ் தேசிய கூட்டமைப்பு

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆட்சி அதிகாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவுசெய்யும் அமர்வு இன்று வியாழக்கிழமை காலை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு 38 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.இதில் 21 உறுப்பினர்கள் மக்கள் தெரிவின் மூலமும் 17 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 17 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நான்கு உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு சார்பில் 04 உறுப்பினர்களும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு சார்பில் நான்கு உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் ஒரு உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் 05உறுப்பினர்களும் சுயேட்சைக்குழு 01,சுயேட்சைக்குழு02,சுயேட்சைக்குழு 04 ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு உறுப்பினருமாக 38 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்றயை அமர்வின்போது திறந்த வாக்கெடுப்பினை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு உறுப்பினர் சி.சோமசுந்திரத்தின் பெயர் முன்மொழியப்பட்டதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தியாகராஜா சரவணபவனின் பெயரும் முன்மொழியப்பட்டு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதன்போது தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு உறுப்பினர் இருவர் வாக்களிக்காமல் நடுநிலை வகித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஈ.பி.டி.பி.என்பன தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தன.
இதனடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 25 வாக்குகளையும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு உறுப்பினர் 11வாக்குகளையும் பெற்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் 14மேலதிக வாக்குகளினால் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.

பிரதி முதல்வர் தெரிவு நடைபெற்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் ஒருவர் பிரதி முதல்வருக்காக முன்மொழிந்தார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கந்தசாமி சத்தியசீலன் முன்மொழியப்பட்டதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீபன் ராஜா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு மும்முனை போட்டியாக வாக்களிப்பு நடைபெற்றது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி முதல்வருக்காக முன்மொழியப்பட்ட உறுப்பினர் உட்பட மூன்று பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதி முதல்வராக முன்மொழியப்பட்டவருக்கு வாக்களித்ததுடன் 23வாக்குகளைப்பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் க.சத்தியசீலன் பிரதி முதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.