உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை காத்தான்குடியில் நடைபெற்றது.

தபால்,தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய கலாசார விவகார அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்புச்செயலாளரும் காத்தான்குடி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான எச்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் லிங்கராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது உள்ளுராட்சிசபை தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் பாற்சோறும் இங்கு வழங்கிவைக்கப்பட்டது.