அரசாங்கம் நியமிக்கும் வரை பிரத்தியேக வகுப்புக்கள் தொடரும்.

(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட எல்லைப்புற பாடசாலையான நாற்பதுவட்டை விபுலானந்தா வித்தியாலயத்தில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால்   பிரத்தியேக வகுப்புக்கள் தற்போது நடாத்தப்பட்டு வருகின்றன. அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன்  வகுப்புக்களை பார்வையிட்டதுடன் வளவாளர்களுக்கான ஊக்குவிப்பு பணத்தினையும் வழங்கி வைத்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த தவிசாளர்,
மட்டக்களப்பின் எல்லைப்புற கிராம மற்றும் அதிகஸ்ட பிரதேச பாடசாலைகளில் இவ்வாறான முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால் இவ்வாறான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், தொழில்வாய்ப்புக்களை பெற முனைகின்ற போது போதியளவான பெறுபேறு இன்மையினால் தொழில்வாய்ப்புக்களை பெற முடியாதுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு பலர் முகங்கொடுத்து வருகின்றனர். இந்த பாடசாலையில் க.பொ.த சாதாரணதரம் ஆரம்பித்த காலத்தில் இருந்து கணித பாடத்திற்கான ஆசிரியர் நியமிக்கமை வேதனை தரும் விடயம்தான். ஆனால் எமது அமைப்பானது அரசாங்கம் நியமிக்கும் வரை இப்பிரத்தியேக வகுப்புக்கள் தொடரும் எனவும் தமிழ், ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்கள் நடைபெறுகின்றது எனவும் தெரிவித்தார். இதுபோன்ற சேவைகளை இவ் அமைப்பு பல பாடசாலைகளில் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.