பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை –மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ள பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்திற்கும்; எனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

 இன்று(10.7.2017) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இன்று மட்டக்களப்பு நகரில் ஐம்பதுக்கும் உட்பட்ட பொது மக்களோடு இணைந்ததாக நடாததப்பட்ட ஒரு ஆர்ப்பார்ட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு பேசிய விடயங்கள் தொடர்பாக ஒரு தெளிவு படுத்தலை ஏற்படுத்த வேண்டிய தேவை இந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபராகிய எனக்கும் என்னோடு சேர்ந்த அதிகாரிகளுக்கும் இருக்கின்றது.

அரசாங்க அதிப ரென்பது அமைச்சரவையினால் நியமனம் செய்யப்படுகின்ற அரசா கடமைகளை ஆற்றுவதற்காக நியமிக்கப்படுகின்ற ஒரு அதிகாரியாகும்.

எனவே அரசு எனக்கு கையளித்த கடமைகளை மட்டும் செய்வதற்கு வரையறுக்கப்பட்ட எனது அதிகார வரம்புக்குள் மட்டும்தான் என்னால் செயற்படமுடியும்.

வாகரை மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்திற்கும்; எனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பதை பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம் வந்த நாளில் இருந்து நான் தெரிவித்து வருகின்றேன்.

இது தொடர்பாக அரச அதிபரான என்னோடு உரிய பிரதேச செயலாளர்களும் கலந்துரையாடவில்லை. இது நிருவாக நடவடிக்கையை அரசியல் மயப்படுத்துகின்ற செயல்பாடாக உள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் அவருடன் சேர்ந்த குழுவினரும் ஊழல் வாதிகள் என இன்று அந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுடன் அவர்களின் பேச்சுக்களிலும் கூறியுள்ளார்கள்.

2010ம் ஆண்டு 2011ம் ஆண்டு இடம் பெற்ற வெள்ள நிவாரணத்தில் ஊழல் நடந்ததாக அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் யார் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தாரோ அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல தயாரில்லை.

இந்த மாவட்டத்தின் நிருவாக நடவடிக்கைகள் அனைத்தும் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் கலந்து கொள்கின்ற அனைவரினாலும் அனுமதிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்ற கூட்டங்களில் அவற்றினை மீளாய்வு செய்யப்பட்டு அவற்றின் செயற்பாடுகள் சீர்தூக்கிப்பார்க்கப்பட்டு மீண்டும் அனுமதிக்கப்பட்டு மீண்டும் அவை சீர்தூக்கிப்பார்க்கப்பட்டு வருகின்ற ஒரு நடைமுறையாகும்.

இந்த ஊழல் குற்றச்சாட்டு;க்களை அந்த நேரங்களில் சுட்டிக்காட்டாமல் மட்டக்களப்பு நகரில் கூடி சுட்டிக்காட்டியிருப்பது எங்களுக்கு மன உளைச்சலை தருகின்ற ஒரு விடயமாக இருக்கின்றது.

இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கு வருகின்ற அத்தனை நிதியொதுக்கீடுகளும் அதனுடைய செயற்பாடுகளும் பிரதேச செயலகங்களினால் தான் மேற் கொள்ளப்படுகின்றன.

எனவே மாவட்ட செயலகத்தினால் இந்த செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதற்கான நிதியொதுக்கீடுகள் நேரடியாக பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டு பிரதேச செயலகங்களினால் மட்டுமே அவைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

காணி அதிகாரம் 13வது திருத்த சட்டமூலத்திலே பிரதேச செயலாளர்களுக்கும் மாகாண சபைக்கும் கையளிக்கப்பட்ட அதிகாரமாகும். இதில் அரசாங்க அதிபருக்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை என்பதை நான் பல தடவை கூறியிருக்கின்றேன்.

இங்கு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் மாட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி மற்றும் கணக்காளர் மற்றும் உள்ளக கணக்காய்வாளர் ஆகியோர் உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள் இருக்கின்றார்கள் ஊழல் ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறுபவர்களும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சொல்கின்றவர்களும் தாங்கள் கூறுகின்ற குற்றச் சாட்டுக்களை உரியவகையில் சமர்ப்பித்து அதில் என்ன நடந்துள்ளது என்பதை பொது மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

ஊடகங்களில் மாத்திரம் வருகின்ற செய்திகளை வைத்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்தினையும் கௌரவத்தையும் அழிப்பதற்கான செயற்பாடுகளில் யாரும் ஈடுபடவது இந்த சமூகத்திற்கு நல்லதல்ல என நினைக்கின்றேன் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மற்றும் மாட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.இன்பராஜன், மற்றும் கணக்காளர் நேசராசா  மற்றும் உள்ளக கணக்காய்வாளர் ஆகியோர் உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.