கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனம் வயதெல்லை 40ஆக வரையறை

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனம் வயதெல்லை 40ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது .

40வயது வரையான பட்டதாரிகளை மட்டுமே, ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் அறிவித்துள்ளதாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.

இதனால் 70க்கு மேற்பட்ட 45வயது வரையான வேலையற்ற பட்டதாரிகள் பாதிப்பினை எதிர்கொள்ள வேண்டியேற்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று(28) வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால், விரைவில் போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவிருக்கின்றது.

இதற்காக 40வயது வரையான பட்டதாரிகளை மட்டுமே நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச்சேவை ஆணைக்குழு, கல்வி அமைச்சுக்கு ஆளுனர் அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள 40க்கும் 45வயதுக்கும் இடைப்பட்ட 70க்கு மேற்பட்ட பட்டதாரிகள் பாதிப்பினை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும்.
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளும் அரச நியமன எல்லையினை 45ஆக உயர்த்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர்களது கோரிக்கையும் நியாயமானது. அதற்கேற்ற வகையில் 45வயது வரை வயதெல்லையை அதிகரித்து ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் கிழக்கு முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் விரைந்து செயற்படவேண்டும் எனவும் மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.