80நாளாக தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகம் 80வது நாளான இன்றும் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

தொழில் உரிமையினை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காந்திபூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தது தொடக்கம் வடகிழக்கில் அந்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் 80வது நாளான இன்று வியாழக்கிழமை முடிவிலியாக தொடரும் போராட்டம் என்னும் தொனிப்பொருளில் இன்றைய சத்தியாக்கிரக போராட்டத்தினை பட்டதாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

தமக்கான தொழில்களைப்பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளபோதிலும் அதற்கான முழு வீச்சு இல்லாத நிலையே இருந்துவருகின்றது.எனவே இது தொடர்பில் அரசியல்வாதிகள் அழுத்தங்களை வழங்கவேண்டும் எனவும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமக்கான நியமனம் வழங்கப்படுவது தொடர்பில் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்காமல் பட்டதாரிகளின் உண்மையான பிரச்சினையை தீர்த்துவைக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமதுபோராட்டத்தின் நியாயத்தினை உணர்ந்துள்ள ஜனாதிபதி விரைவில் தமக்கான நியமனத்தை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.