முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமாக செயற்படுகின்றனர் –நீதிபதி கணேசராஜா

முஸ்லிம் பெண்கள் இன்று பல்வேறு துறைகளிலும் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமாக முறையில் செயற்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு தேவைநாடும் மகளிர் அமைப்பு ஏற்பாடுசெய்த மாற்றத்திற்காய் துணிந்திரு என்னும் தலைப்பிலான மகளிர் விழிப்பூட்டும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் தேவைநாடும் மகளிர் அமைப்பின் சட்ட ஆலோசகர் கே.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மற்றும் விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அசீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பெண்கள் தொடர்பிலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது.

அத்துடன் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு இதன்போது வாழ்வாதார உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி,

முஸ்லிம்களின் திருமணச்சட்டத்தில் முன்மாதிரியான விடயங்களில் திருத்தங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் சில இஸ்லாமிய தலைவர்கள் ஆண்பெண் சமத்துவதிற்கு மறுப்பு தெரிவித்தவேளையில் அதற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் அமைப்பு போர்கொடி தூக்கியதுடன் அக்கூற்றினை நிராகரித்து ஊடகங்களில் அறிக்கையினையும் வெளியிட்டதுடன் அவ்வாறான இஸ்லாமிய தலைவர் தேவையில்லையென்றும் துணிச்சலுடன் வெளிப்படையாக தெரிவித்தது.

முஸ்லிம் சமூதாயத்தில் துணிச்சல்மிக்க ஒரு பெண் சமூதாயம் உருவாகியுள்ளதையிட்டு நாங்கள் பெருமைப்படுகின்றோம்.முஸ்லிம் சமூகம் அனைத்து விடயங்களிலும் முன்னோக்கிச்சென்றுகொண்டுள்ளது.

மனித உரிமை விடயங்களில் கூட முஸ்லிம் சமூகம் துணிச்சலுடன் குரல்கொடுத்துவருகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பல கொடுமைகளுக்கு எதிராக குரல்கொடுத்தவர்கள் முஸ்லிம் பெண்களாகும்.வெளியிடங்களில் இருந்துவந்து பல செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டனர்.என்னையும் அக்காலத்தில் அழைத்து சட்டரீதியான விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

இன்று கல்வியில் கூட முஸ்லிம் பெண்கள் முன்னேறிக்கொண்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்று அங்கு கல்வி கற்றதன் பின்னர் இங்கு வந்து மிகச்சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுக்கொண்டுள்ளனர்.அதனை ஏனைய சமுதாயத்தில் உள்ளவர்களும் பின்பற்றவேண்டும்.

பத்துவருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் குடும்ப வன்முறைச்சட்டம் உருவாக்கப்பட்டது.பெண் மீது ஆண் தாக்குதல் நடத்தலாம் என்ற பாரம்பரிய ரீதியான நடைமுறையிருந்துவருகின்றது.இந்த நிலைமாற்றப்படவேண்டும்.பெண்கள் பல விடயங்களில் ஆண்களுக்கு துணையாக செயற்படும்போது அவர்களுக்கான மதிப்பினை வழங்கவேண்டும்.

குடும்ப வன்முறைச்சட்டம் உருவாக்கப்பட்டது தண்டனை வழங்குவதற்கு அல்ல.குடும்பங்களில் ஏற்படும் பிணக்குளை தீர்ப்பதற்கான இடவெளியை வழங்கி அவர்களுக்கிடையில் ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்காகும்.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இடைவெளியை வழங்கும்போது ஒருவர் ஒருவரைப்பற்றிய மதிப்பினை வளர்த்துக்கொள்ளும்போது அவர்கள் இணைவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.அவ்வாறான இடைவெளிகள் வழங்கப்படும்போது இணைந்து வாழவிரும்பிய பல நிகழ்வுகள் எங்கள் நீதிமன்றில் நடந்துள்ளது.

அந்த இடைவெளியை ஏற்படுத்தும் நோக்கிலேயே குடும்ப வன்முறைச்சட்டம் உருவாக்கப்பட்டதே தவிர கணவனுக்கோ,மனைவிக்கோ தண்டனை வழங்கவோ பிரித்துவைப்பதற்கோ அல்ல.இதனை ஒரு குற்றவியல் சட்டமாக அல்லாமல் வன்முறையை இடைநிறுத்திவைப்பதற்கான பெண்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்கான சட்டமாக இந்த குடும்ப வன்முறைச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பெண்களும் சட்டம் என்ற ஒன்றை சரியானமுறையில் பயன்படுத்தவேண்டும்.எந்த கலாசாரமாக இருந்தாலும் வன்முறையென்று வரும்போது சட்டத்தினை நாடவேண்டும்.
இவ்வாறான வழங்குகளில் பல சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை சரியான முறையில் முன்வைப்பதில்லை.

எனவே இவ்வாறான வழக்குகளில் சரியான வாதங்களை முன்வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்க சட்டத்தரணிகள் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.