ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் - சந்தேக நபர்கள் பிணையில் விடுவிப்பு

மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் உயிர் அச்சுறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை கல்குடா பகுதியில் நடைபெற்றுவரும் மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பில் தகவல்களைப்பெற்றுக்கொள்ளும் வகையில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஆறு கிலோமீற்றர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளில் துரத்தப்பட்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து ஏறாவூர் மற்றும் கல்குடா பொலிஸ் நிலையங்களில் குறித்த ஊடகவியலாளர்கள் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்ததன் விளைவாக இருவர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபர்கள் இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இருவரையும் 50ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்தார்.

இதன்போது இருவருக்கும் கடுமையான எச்சரிக்கையினை விடுத்த நீதிபதி முறைப்பாட்டாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் விடுக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் கல்குடா பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பிலும் நீதிபதி கடுமையான எச்சரிக்கையினைவிடுத்துடன் பொலிஸார் ஒருபக்க சார்பாக செயற்படமுற்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் சார்பில் பிரபல சட்டத்தரணி பே.பிரேம்நாத் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.