மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை கண்கொண்டு பார்க்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் மாபெரும் அமைதி கவன ஈர்ப்பு ஊர்வலம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டனர்.

பட்டதாரி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதுபோன்ற உருவபொம்மை கட்டித்தூக்கப்பட்டு அதனை பட்டதாரிகள் தூக்கியவாறு கவன ஈர்ப்பு ஊர்வலத்தினை முன்னெடுத்தனர்.

21 நாட்களாக காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் நடாத்திவரும் நிலையில் இன்று இந்த அமைதி கவன ஈர்ப்பு ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.

காந்தி பூங்கா முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம் பிரதான பஸ்நிலைய வீதியை அடைந்து அங்கிருந்து புதுப்பாலம் ஊடாக தாண்டவன்வெளி சந்தியை அடைந்து அதன் ஊடாக திருமலை மட்டக்களப்பு வீதியூடாக காந்தி பூங்காவினை ஊர்வலம் வந்தடைந்தது.

சுமார் ஒரு கிலோமீற்றருக்கு அதிகமான தூரத்தினைக்கொண்டதாக பட்டதாரிகளின் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது.மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசேட போக்குவரத்து ஓழுங்குகளை மேற்கொண்டிருந்தனர்.

மத்திய மாகாண அரசாங்கமே எம்மீது கரிசனை செலுத்து,சுமந்திரனுக்கு முடியுமென்றால் மட்டக்களப்பு அரசியல்வாதிகளுக்கு பிரதமரை சந்திக்க ஏன் முடியவில்லை,கிழக்கு முதலமைச்சர் அறிக்கை அரசியலை விடுத்து தமக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையெடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை பட்டதாரிகள் இதன்போது விடுத்தனர்.

21நாட்களைக்கடந்துள்ள நிலையிலும் எதுவித சமிக்ஞைகளும் கிடைக்காத நிலையில் அரசினது கவனத்தை ஈர்க்கும் வகையில் மௌன கவன ஈர்ப்பு ஊர்வலத்தினை நாங்கள் இன்று முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

எங்களது போராட்டத்தின்போது வந்து பார்வையிட்டுச்சென்ற எந்த அரசியல்வாதியும் அதிகாரிகளும் எங்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவினைப்பெற்றுத்தருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஒருபார்வைப்பொருளாக பார்த்துவிட்டுச்சென்ற நிலையே காணப்படுகின்றது.

வடமாகாணத்தில் உள்ள பட்டதாரிகளின் பிரச்சினைகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கு யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பட்டதாரிகளை பிரதமரிடம் அழைத்துச்சென்றிருந்தார்.சுமந்திரனால் முடியுமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களினால் பிரதமரிடம் அழைத்துச்செல்லப்படாமை அவர்களின் அலட்சியப்போக்கா அல்லது இயலாமையை காட்டுகின்றதா என்பது எங்களுக்கு தெரியாமல் உள்ளது.

மிகவிரைவில் நடவடிக்கை எடுத்துதருவேன் என்று கூறியிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையினையும் மேற்கொண்டதாக எமக்கு தெரியவில்லை.21நாட்களை கடந்துள்ள நிலையில் எங்களை வந்து பார்வையிடவும் இல்லை.

படித்த சமூதாயத்தின் நிலையினை புரிந்துகொள்ளாத நிலையில் நாங்கள் மிகவும் மனவேதனையுடன் எங்களது போராட்டத்தினை வேறு வகையில் நடாத்துவதற்கு தூண்டுவதாக இந்த அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அமைகின்றது.

எமக்கான உரிய பதில் கிடைக்கும் வரையில் தொடர்ச்சியாக எமது சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பதையும் நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.