வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தில் மயங்கி வீழ்ந்த பெண் பட்டதாரி –அழைப்பு விடுக்கப்பட்டும் வருகைதராத அரசியல்வாதிகள்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தின்போது பட்டதாரி பெண் ஒருவர் மயங்கி வீழ்ந்ததன் காரணமாக அப்பகுதியில் சிறுபரபரப்பு ஏற்பட்டது.

இன்று 30வது தினமாக மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டம் நடாத்தும் பட்டதாரிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தந்திகளை அனுப்பும் வகையில் மட்டக்களப்பு பிரதான நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

இதன்போது தபாலகத்திற்கு அருகில் ஊர்வலம் வந்தர்கள் கட்டம்கட்டமாக தந்தி அனுப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது பெண் பட்டதாரி ஓருவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.

அவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றைய போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளுக்கு வேலையற்ற பட்டதாரிகள் அழைப்பு விடுத்திருந்த நிலையிலும் எவரும் கலந்துகொள்ளாதது தொடர்பில் பட்டதாரிகள் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்.