கல்குடா மதுபான உற்பத்தி நிலையத்தினை மூடுவதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம்

மட்டக்களப்பு,கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்திசாலையின் பணிகளை நிறுத்தி மாவட்டத்தில் இருந்து அவற்றினை அகற்றுவதற்கான தீர்மானத்தினை மட்டக்களப்பு மாவட்ட செயலக அபிவிருத்திக்குழு தீர்மானித்துள்ளதுடன் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதவு தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு இந்த ஆண்டு 4500மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டள்ளதுடன் 1700திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய மாகாண அமைச்சுகள் மற்றும் பல்வேறு நிதியீட்டங்கள் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டன.

இந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துவருவதுடன் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு விசேட செயலணி அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அவற்றினை தடுக்கும் வழிவகைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட விரோத மண் அகழ்வு செயற்பாடுகள் மற்றும் மதுபாவனை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அவற்றினை தடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கொள்ளப்படும் காணி பிரச்சினைகளை ஆராயும் வகையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இதேபோன்று மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், சுற்றுப்புறச்சூழல், விவசாயம்,கடற்தொழில்,நீரியல் வளம் போன்றவை தொடர்பில் விசேட ஆலோசனைகளும் நடைபெற்றது.