களுவாஞ்சிகுடியில் இருவேறு விபத்துகளில் இருவர் பலி ,நான்கு பேர் படுகாயம்

(தாசன்)

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில்; இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் இருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

லொறி ஒன்றும் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும்; மோதிக்கொண்டதில முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த ஏனைய இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் களுவாஞ்சழகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்று மாலை களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துறைநீலாவணை பிரதான வீதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.