இலங்கை போக்குவரத்து சபை பஸ் மீது மட்டக்களப்பில் தாக்குதல்

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை இலங்கை போக்குவரத்துசபை பஸ் மீது கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இன்று காலை ஏறாவூரில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற பஸ்மீது ஊறணியில் வைத்து இந்த கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்து இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் மேற்கொண்டுவரும் பணிப்பகிஸ்கரிப்பினை நடாத்திவரும் நிலையில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.