மட்டக்களப்பில் கர்ப்பிணிப்பெண்கள் சிலர் பாலியல் நோயினால் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் கர்ப்பிணிப்பெண்களில் எட்டு பேரில் நான்கு பேர் பாலியல் தொடர்பான நோய்களுக்கு தொற்றுக்குள்ளாகியுள்ளது தொடர்பில் இனங்காணப்படுவதாக இலங்கை குடும்பநல சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.இம்தியாஸ் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு,கல்லடியில் உள்ள விமோச்சனா இல்லத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இலவச வைத்தியமுகாம் மற்றும் பார்வையற்றவர்களுக்கான கண்ணாடி வழங்கும் நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மற்றும் இலங்கை குடும்பநல சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

விமோச்சனா இல்லத்தின் தலைவி திருமதி செல்விகா சகாயதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் கு.சுகுணன், இலங்கை குடும்பநல சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.இம்தியாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இரத்தப்பரிசோதனை,புற்றுநோய் பரிசோதனை உட்பட பல்வேறு இலவச மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்பட்டதுடன் மருத்து சோதனைகளும் நடாத்தப்பட்டு பெறுமதி மருந்துகளும் வழங்கிவைக்கப்பட்டன.

போதையில் இருந்து மீட்போம் என்னும் தொனிப்பொருளில் போதைப்பாவனையில் அகப்பட்டுள்ளோரை அதில் இருந்து மீட்டு அவர்களை சமூகத்துடன் இணைக்கும் பணியை விமோசனா இல்லம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்டுவருகின்றது.

இந்த ஐந்து ஆண்டு பூர்த்தி நிகழ்வின்போதும் மதுபோதையினால் ஏற்படும் தீமைகள் அதன் சமூகம் தாக்கம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த இம்தியாஸ்,
இலங்கையில் அதிகரித்துவரும் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது.அதன்காரணமாக சிவப்புகோட்டுக்குள் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.இரண்டாயிரம்பேரை தாண்டியதாக எச்ஐவியை கொண்டவர்களைக்கொண்டுள்ளது.

பத்தாயிரம்பேரை சோதனை செய்யும்போது அதில் இரண்டுபேர் எச்ஐவிக்கு உட்பட்டவர்களாகவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் 2011ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு பாலிய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றோம்.

கர்ப்பிணித்தாய்மாருக்கு மட்டுமே அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அதில் வருடாந்த 8பேரில் நான்கு பேரை பாலியல் நோய் தொடர்பாக இனங்காணப்படுகின்றனர்.இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.இவ்வாறானவர்கள் இனங்காணப்படும்போது மட்டக்களப்பில் உள்ள எச்ஐவி பகுதிக்கு அறிவித்தல்களை வழங்குவோம்.

எச்ஐவி மட்டுமன்றி மட்டுமன்றி அதுபோல் பல பாலியல் தொடர்பான நோய்கள் உள்ளது.மதுபோதை மற்றும் போதைவஸ்து பாவனைகள் அதிகரித்துச்செல்வதும் இவ்வாறான பாலியல் நோய்கள் அதிகரிப்பதற்கான காரணமாக அமைகின்றது.