வழமைக்கு திரும்பியது மட்டக்களப்பு நகரம்

மட்டக்களப்பு நகரில் சனிக்கிழமை மங்கலராம விகாராதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளினால் ஏற்பட்ட பதற்ற நிலைமை தனிந்து இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல ரத்ன தேரருக்கு ஆதரவளிக்கும் வகையில் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனாவினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதற்கான முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுமானால் நகரில் பொதுமக்களுக்கு பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படும் எனவும் அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும் அதன் காரணமாக குறித்த ஆர்ப்பாட்டத்தினை தடைசெய்யுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனா பொதுக்கூட்டம் நடாத்தவோ,ஆர்ப்பாட்டம் நடத்துவதோ தடைசெய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் தடையினை எதிர்த்து மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கல தேரர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்த மட்டக்களப்பு பிரதான வீதிக்கு செல்லமுற்பட்டபோது பொலிஸார் தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்ததன் காரணமாக சந்தை வீதி வழியாக பயனியர் வீதி மற்றும் கொலட் வீதிகளில் சென்று ஆர்ப்பாட்டங்களை தேரரும்அவரின் ஆதரவாளர்களும் மேற்கொண்டதுடன் தகாத வார்த்தைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வெளியிட்டுவந்தனர்.

அத்துடன் தேரரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பு நகரில் பெருமளவான பெருமளவான தமிழ்-முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதன் காரணமாக நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வரையில் மட்டக்களப் நகரில் பெரும் பதற்றம் நிலவியதுடன் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் மட்டக்களப்பு - பொலநறுவை எல்லைப் பிரதேசமான ரிதிதென்ன பகுதியில் நிலைகொண்டிருந்த பொதுபலசேனாவை சேர்ந்தவர்கள் இன்றுகாலை மட்டக்களப்பில் இருந்துசென்றுவிட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து மட்டக்களப்பில் அமைதி நிலையை அவதானிக்கமுடிந்தது.

எனினும் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மங்கலராம விகாரை வீதி மறிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

இதேவேளை நல்லாட்சியில் முன்னெடுக்கப்படும் இன ஐக்கியத்தை குழப்பும் வகையிலான செயற்பாடுகளை யாரும் முன்னெடுக்கவேண்டாம் என மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.ஜேசுதாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.