நாளை வேட்பு மனுத்தாக்கல், நண்பகல் வரை கால அவகாசம்.

(சசி துறையூர்) 

நாடளாவிய ரீதியில் நான்காவது இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல் டிசம்பர் 18ல் நடைபெறவுள்ளது.

அதற்க்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை வெள்ளிக்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணி வரை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் தாக்கல் செய்ய முடியும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் MLMN.நைறூஸ் தெரிவித்தார்.

மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வேட்பு மனுக்களை ஏற்கும் நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதேச செயலாளர் முன்னிலையில் பிரதேசங்களுக்கு பொறுப்பான இளைஞர் சேவை அலுவலர்களின் தலைமையில் வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வுகள் இடம் பெறுமென்றும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

இம்முறை தேர்தல் மூலம்  மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.