காத்தான்குடியில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடியில் வீடு ஒன்றின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு காத்தான்குடி டீன் வீதியில் உள்ள வீட்டின் பின்கதவினை உடைத்துச்சென்ற கொள்ளையர்கள் அங்கு உறங்கிக்கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கமாலையினை அறுத்துச்சென்றுள்ளதுடன் இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் கொள்ளையிட்டுச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பேர் வந்து இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளபோதிலும் ஒருவரை தாங்கள் கண்டதாகவும் குறித்த வீட்டில் உள்ளோர் தெரிவித்தனர்.

இதன்போது இரண்டறைப்பவுன் தங்கமாலையும் இரண்டு விலையுயர்ந்த கையடக்க தொலைபேசிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்தலத்திற்கு சென்ற மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி என்.ரவீந்திரன் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.