மட்டக்களப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கவன ஈர்ப்பு போராட்டம்

வரவு செலவுத்திட்டத்தில் சுகாதார துறைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று அடையாள கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியது.

வரவு செலவுத்திட்டத்தில் இலவச சுகாதாரத்துறையினை கேள்விக்குட்படுத்தப்படும் பல்வேறு பாதகமான இணைக்கள் காணப்படுவதாகவும் அவற்றினை நீக்குமாறு கோரி இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

இதனடிப்படையில் இன்று முற்பகல் 12.00மணி தொடக்கம் 01மணி வரையில் இந்த போராட்டம் ஒன்பது மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் கீழ் கிழக்கு மாகாணத்திற்கான கவன ஈர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் டாக்டர் ஏ.எல்.என். லியனகே தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றும் வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது வைத்தியர்களின் வீடுதி பகுதியில் இருந்து ஊர்வலம் ஆரம்பமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை நடைபெற்றதுடன் வைத்தியசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவத்தில் கைவைக்காதே,அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் கைவைக்காதே,தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே,புகையிலை நிறுவனங்களிடம் கையேந்துவதை நிறுத்து,மக்களுக்கு தண்டப்பணம்,அரசியல்வாதிகளுக்கு சொத்துசுகம்,எட்காவை வரவேற்கும் வரவுசெலவுத்திட்டம் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களுக்கு பாதகமாகவும் இலவச சுகாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலும் வரவுசெலவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஒரு வார காலத்திற்குள் பதில் தராதுவிட்டால் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.