பெரியகல்லாறில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் விடு ஒன்று உடைக்கப்பட்டு பெருமளவான தங்க நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள வீடு ஒன்றே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் பின்பகுதி உடைக்கப்பட்டு உள் நுழைந்து இந்த கொள்ளை நடாத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது 12 பவுன் தங்க நகைகளும் 72000ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரினால் முறையிடப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் கணவன் மனைவி வசித்துவந்த நிலையில் இருவரும் ஆசிரியர் எனவும் வீட்டை பூட்டிவிட்டு பாடசாலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய நிலையிலேயே வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.