மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு போராட்டம் -வரவுசெலவு திட்டத்தில் தீர்வு வழங்குமாறு கோரிக்கை

2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வலியுறுத்தி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தி பூங்கா முன்றிலில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காந்தி பூங்கா முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றதுடன் கவன ஈர்ப்பு பேரணியும் இதன்போது நடாத்தப்பட்டது.

நான்கு வருட சிறப்பு நுண்கலை பட்டதாரிகள் வெறும் கண்துடைப்பா,தமிழ் மொழிமூல நுண்கலை பட்டதாரிகளை புறக்கணித்தது ஏன்?,மத்திய அரசே.மாகாண அரசே பட்டதாரிகளுக்கு உடனடியாக நியமனம் வழங்கு,மாகாண அமைச்சுகளில் பட்டதாரிகளுக்கான செயற்பாடுகள் எந்தளவில்?,பட்டதாரிகள் தொடர்ந்து வீதியிலா போன்ற பல்வேறு சுலோகங்களை தாங்கியவாறு பட்டதாரிகள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்ற பேரணியை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் பூர்த்திசெய்யப்படாத காரணத்தினால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய வெற்றிடங்கள் மற்றும் திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்களில் 5000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளதாகவும் அவற்றிக்கு பயிற்சி அடிப்படையிலாவது பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கல்வியல் கல்லூரி டிப்ளோமாதாரர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு வழங்கிய ஆசிரிய நியமனங்களை கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்வதை கிழக்கு மாகாணசபை நிறுத்தவேண்டும்.

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும்பொது வெளியாகும் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை அதிகரிக்காதததன் காரணமாகவே இவ்வாறான போராட்டங்கள் நடாத்தப்படுவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.