பேனா தூக்கும் கைகளில் ஆயுதம் ஏந்த வைக்கவேண்டாம் -சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள ;ஆர்ப்பாட்டம்

பேனா தூக்கும் கைகளில் ஆயுதம் ஏந்த வைக்கவேண்டாம் என்ற கோசத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடி,சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 10.30மணியளவில் கல்லடி,சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் யாழில் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான பல்வேறு பதாகைகளையும் ஏந்தியிருந்ததுடன் படுகொலைக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.

யாழில் படுகொலைசெய்யப்பட்ட மாணவர்களின் கொலை தொடர்பில் நீதியான விசாரணை நடைபெறவேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் மாணவர்கள் தெரிவித்தர்.

கடந்த கால யுத்தம் காரணமாக பெரும் கஸ்டத்தின் மத்தியில் கல்வியை தொடர்ந்து இன்று பல்கலைக்கழகம் வரை செல்லும் தமிழ் மாணவர்கள் மீது இவ்வாறான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது என மாணவர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உட்பட தமிழ் மாணவர்கள் கடத்தல் காணாமல்போதல் சம்பங்கள் என வடகிழக்கில் பல்வேறு சம்பங்கள் கடந்த காலத்தில் நடைபெற்றுள்ள நிலையில் இதுவரையில் தமக்கான நீதி வழங்கப்படாத நிலையிலேயே இன்று இந்த மாணவர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நல்லாட்சியிலாவது இவ்வாறான சம்பவங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.