மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்கு 312 மில்லியன் ஒதுக்கீடு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 212 அபிவிருத்தி திட்டங்களுக்காக 312மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்,மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் மா.உதயகுமார்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா உட்பட திணைக்களங்களின் தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அவற்றில் பிரச்சினைகள் உள்ள விடயங்கள் தொடர்பில்ஆராயப்பட்டு தீர்த்துவைக்கப்பட்டது.

அத்துடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

இதன்போது அபிவிருத்தி பணிகளுக்கு கிறவல் ஏற்றுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதனை தீர்ப்பதற்கு உரிய அமைச்சினை அனுகுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.