வெல்லாவெளியில் யுவதி கடத்தில் -சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவர் கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவரும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த திங்கட்கிழமை வெல்லாவெளி பொலிpஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலவத்தையில் வைத்து யுவதி ஒருவர் வானில் வந்தோரினால் கடத்திசெல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அது தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு தகவல்கள் வழங்கப்பட்டது.

குறித்த வான் கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில் வானில் பயணம்செய்த மூவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

எனினும் குறித்த கடத்தலின் பிரதான சந்தேகநபரும் குறித்த யுவதியும் வானில் இருக்கவில்லையெனவும் அவர்களை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட வானும் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல்போயுள்ள யுவதியையும் பிரதான சந்தேக நபரையும் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அம்பாறை மாவட்டத்தின் சேனைக்குடியிருப்பு மற்றும் கல்முனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.