சிகரத்தினை நோக்கிய கிரிக்கட் போட்டியில் இந்த ஆண்டு சம்பியன் பெரியகல்லாறு மத்திய கல்லூரி

மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையிலான “பெட்டில் ஒப்த எவரஸ்ட்” சிகரத்தினை நோக்கி மாபெரும் கிரிக்கட் போட்டியில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையில் ஆறாவது ஆண்டாகவும்“பெட்டில் ஒப்த எவரஸ்ட்” சிகரத்தினை நோக்கி கிரிக்கட் போட்டி நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா ஆகியோர் அதிதியாக கலந்துகொண்டதுடன் பட்டிருப்பு,மட்டக்களப்பு கல்வித்திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றதுடன் வீரர்களை அதிதிகளுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ஆரம்பமாகும் வகையில் இரு அணித்தலைவர்களுக்கும் இடையிலான நாணய சுழற்சி நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியினர் களத்தடுப்பினை தெரிவுசெய்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணியினர் 46ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டனர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியினர் 26ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 103 ஓட்டங்கள் பெற்று வெற்றிவாகை சூடினர்.

ஆறாவது ஆண்டாக நடாத்தப்படும் இந்த கிரிக்கட் போட்டியில் மூன்று தடவைகள் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் மூன்று தடவைகள் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் வெற்றிவாகை சூடியுள்ளன.

இந்த கிரிக்கட் போட்டியில் 58 ஓட்டங்களையும் 02 விக்கட்டுகளையும் கைப்பற்றிய பெரியகல்லாறு மத்திய கல்லூரி வீரர் ரி.லுக்சாந்த் சிறப்பாட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.