அரசியல் நோக்கத்திற்காகவே எக்டா ஒப்பந்தம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிழக்கு இணைப்பாளர் லதாகரன்

ஒப்பந்தங்கள் செய்யப்படும்போது ஜனநாயக ரீதியானதாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும்.ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை தவிர்த்து தமது அரசியல் நோக்கத்திற்காக அவசரமாக எக்டா ஒப்பந்தத்தினை செய்ய முயற்சிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று பிற்பகல் நடாத்தப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பல்வைத்தியர்கள் சங்கத்துடன் இணைந்து இரண்டு விடயங்களுக்கான இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுகின்றது.முதலாவது இலங்கை இந்தியாவுக்கு இடையில் செய்யப்படவுள்ள எக்டா ஒப்பந்தம்.இந்த ஒப்பந்தங்களை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்துவருகின்றோம்.சீபா என்ற ஒப்பந்தம் முதல் இதனை நாங்கள் எதிர்த்துவருகின்றோம்.

இது ஜனநாயக ரீதியாக செய்யப்படும் ஒரு ஒப்பந்தம் அல்ல.இந்த ஒப்பந்தம் இலங்கைக்கு ஒரு பாதிப்பான விடயமாகவே அமையும்.இந்த ஒப்பந்தங்களை நாங்கள் முற்றாக எதிர்க்கவில்லை.ஒரு தேசிய ரீதியான கொள்கையினை வகுத்து அந்த கொள்கைகள் ஊடாக இந்த ஒப்பந்தங்கள் செய்யப்படவேண்டும்.

இவ்வாறான ஒப்பந்தங்கள் செய்யப்படும்போது ஜனநாயக ரீதியானதாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும்.தற்போதைய அரசாங்கம் அதனை தவிர்த்து தமது அரசியல் நோக்கத்திற்காக அவசரமாக இந்த ஒப்பந்தத்தினை செய்ய முயற்சிக்கின்றனர்.

ஆகவே முழுமையாக இந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஏனைய வைத்திய சங்கங்களும் இணைந்து இந்த ஒப்பந்தத்தினை அவசரம்கொண்டு செய்யவேண்டாம்.தேசிய கொள்கையினை வகுத்துசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.