மட்டக்களப்பில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ விடுதி அருகில் இருந்து கண்டன பேரணி காந்தி பூங்காவரை நடைபெற்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள எக்டா ஒப்பந்தத்தினை நிறுத்துமாறு கோரியும் மாலேபே தனியார் பல்கலைக்கழகத்தினை அரசு பொறுப்பேற்குமாறு வலிறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

காந்தி பூங்காவினை பேரணி வந்தடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் தலைவர் அழகையா லதாகரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள்,பல்வைத்தியர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் எக்டா உடன்படிக்கையினை நிறுத்துமாறு கோhரும் பதாகைகளும் ஏந்தியிருந்தனர்.