வவுணதீவு,பட்டிப்பளையில் யானைகள் அட்டகாசம் -மூன்று வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை யானைகளின் தாக்குதல்கள் காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பயிர்செய்கைகளும் அழிக்கப்பட்டுள்ளன.
வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பன்சேனையில் ஒரு வீடும் நல்லதண்ணிஓடையில் ஒரு வீடும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, விளாவடிவட்டையில் ஒரு வீடும் சேதமடைந்துள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லதண்ணிஓடையில் உள்ள வீட்டினை உடைத்து அங்கு சிறுபோக செய்கைக்காக வைத்திருந்த விதை நெல்களை யானை உண்டுவிட்டுசென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பயிர் நிலங்களையும் சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டுத்தோட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பன்சேனையில் வீடு ஒன்றை யானை உடைத்தபோது அந்த வீட்டில் தங்கியிருந்த வயோதிப பெண்கள் இருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.