கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளுங்கள் - மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

ஊடகத்துறை அமைச்சினால் வடக்கு நோக்கிய தென்னிலங்கை ஊடகவியலாளர்களின் பயணத்தினை வரவேற்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,கிழக்கு ஊடகவியலாளர்கள் குறித்தும் ஊடக அமைச்சு கவனத்தில் கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த கால யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஊடக அமைச்சர் மற்றும் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் மேற்கொண்டுள்ள நல்லிணக்க பயணத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களாகிய நாங்கள் வரவேற்கின்றோம்.

இதன்போது பாதிக்கப்பட்டுள்ள வடபுல ஊடகவியலாளர்களின் நிலைமைகள் தொடர்பில் ஏனையவர்கள் அறியக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.அத்துடன் ஊடகவியலாளர்களுக்குள்ளான தொடர்புகளும் அதிகரிக்கும் நிலைமை ஏற்படும்.

கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடுசெய்யாத நிலையில் புதிய அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதை நாங்கள் வரவேற்கின்றோம்.

இதேபோன்று கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் ஊடக அமைச்சு கவனம் செலுத்தவேண்டும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கோரி நிற்கின்றோம்.

கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளதுடன் அதிகளவான ஊடவியலாளர்கள் நாட்டை விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் ஊடக அமைச்சு கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதுடன் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் முறையான விசாரணைகளையும் முன்னெடுக்கவேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.