“வேடர், பறங்கியர், தெலுங்கர் சமூகங்களின் ஆற்றுகை – காட்சிப்படுத்தல் - கலந்துரையாடல்”

(ம.லாவண்யா)

ஆண்டு தோறும் உலக தாய்மொழி தினமானது பெப்ரவரி 21ம் திகதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஒருவருக்கொருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி பின்னாளில் இனத்தின் அடையாளமாக மாறியது. உலகலாவிய ரீதியாக பேசப்படும் மொழிகள் பொதுமொழி, தாய்மொழி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

உலகிலுள்ள மொழிகளுள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும் ஒற்றுமையை மேம்படுத்திக் கொள்ளவும் வருடம் தோறும் 21ம் திகதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ (ருNநுளுஊழு) அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் பாகிஸ்தானில் உருது மொழியே அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ல் கிழக்குப் பாகிஸ்தானில் (தற்போதய வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழி ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து 1952ம் ஆண்டு பெப்ரவரி 21ம் திகதி டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி நடாத்திய தாய்மொழியைப் போராட்டத்தில் பலர் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதில் பலியான மாணவர்களின் நினைவாகவே 1999ம் ஆண்டு இத்தினம் யுனெஸ்கோ ருNநுளுஊழு அமைப்பினால் உருவாக்கப்பட்டது.

அத்தோடு ஒரு இனத்தின் தாய்மொழி அச் சமூகத்தின் பல்வகை அம்சங்களை சுமந்து நிற்கின்றது. அத் தனித்துவமான அம்சங்களை பரவலடையச்செய்வது தற்காலத்தில் அவசியமானதாக இருப்பதோடு இக் கொண்டாட்டம் சமூக கலைப் பண்பாட்டு ஊடாட்டமாகவும் அமைகின்றது.

அந்தவகையில் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகமும் தாய்மொழி தினத்தை கொண்டாடத் தீர்மானித்துள்ளது.

இந் நிறுவகமானது கலை, சமூக, பண்பாட்டுக் கற்கைகளுடன் அடிப்படையான தொடர்புகளைக் கொண்டமைந்துள்ளதுடன், கலை வழியான பண்பாட்டு முன்னெடுப்புக்களை வலுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு, பின்புலத்தில் பன்மொழி மற்றும் பண்பாட்டுக் கலைஞர்களை அவர்களது ஆற்றுகைகள் வழி ஆசிரிய மாணவ சமூகத்துடன் ஊடாட வைப்பதன் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து அளிக்கைகளில் ஈடுபடும் ஒரு கற்றல் செயல்முறையை ஏற்படுத்திக் கொடுக்கிறது எனலாம்.

இந் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ள பூர்விகக் குடிகள் மற்றும் பாரம்பரிய இனக்குழுக்கள் சார் கலைஞர்கள் அவர்களது பண்பாட்டுப் பாரம்பரிய அளிக்கைகள் ஊடாக சமூக இருப்பு நிலை, எதிர்கொள்ளும் சாவல்கள் குறித்த அவர்களது எண்ணக்கருவில் அக்கறை கொள்வதும் உயர்கல்வி நிறுவகமொன்று சமூகத்துடன் கொண்டிருக்கும் நல்லுறவை வலுப்படுத்துவதாகவும், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஆசிரியர் மாணவரை ஆற்றுப்படுத்துவதாகவும் அமைகின்றன. அதன் அடிப்படையில் இந் நிகழ்வு கொண்டாட்டத்துக்கும் கற்றலுக்கும் உரியதாகின்றது.

இந் நிகழ்வானது பெப்ரவரி 21ம் திகதி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் காலை 09.00 மணி தொடக்கம் இரவு 08.00 மணி வரை நிறுவக வளாகம் மற்றும்  கல்லடி உப்போடை பேச்சியம்மன் ஆலய வளாகம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

இதில் மட்டக்களப்பு பறங்கியர் சமூகத்தினரது ஆற்றுகைகள், அளிக்கம்பை தெலுங்கர் மற்றும் களுவங்கேணி வேடர் சமூகங்களின் சடங்குசார் அளிக்கைகள், அம்மந்தனாவெளி வேடர் சமூகத்தின் புலிக்கூத்து, மேலும் இவ் சமூகங்களின் கலை, கைவினைப் பொருட்களின் காட்சிப்படுத்தல்கள், அது சார்ந்த கலைஞர்களுடனான கலந்துரையாடல்கள் அத்தோடு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக இசைக்குழுவின் ஈழத்துப் பாடல்கள் இசை நிகழ்வு போன்றன இடம்பெறவுள்ளன.

அனைவரையும் இந் நிகழ்வில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ம.லாவண்யா,
உதவி விரிவுரையாளர்,
நடன, நாடகத்துறை,
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.