கொக்கட்டிச்சோலையில் சட்ட விரோத மதுபானம் -இருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனைப்பகுதியில் கசிப்பு போத்தல்களுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பகுதியில் சட்ட விரோத மதுபானவிற்பனை மற்றும் கசிப்பு விற்பனையினை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் கொக்கட்டிச்சோலை பன்சேனை பகுதியில் மூன்று கசிப்பு போத்தல்களுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ரி.வரதராஜன் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இவர் கைதுசெய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதேபோன்று கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனைசெய்த பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்களுக்கான வழங்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.