இலங்கையில் முதலாவது உவர்நீர் மீன் உற்பத்தி நிலையம் மட்டக்களப்பில் நிர்மாணம்

ஜனாதிபதி மைத்திபாலசிறிசேனவின் தலைமையின் கீழான நல்லாட்சியில் இரு மொழி சமத்துவம் வழங்கப்பட்டுள்ளதன் காரணத்தினால் சிறந்த ஒரு நாட்டினை கட்டியெழுப்பமுடியும் என மீன்பிடி கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

நாங்கள் இந்த நாட்டில் பயங்கரவாதம் உருவாகும் என்று நினைத்து எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை.பயங்கரவாதம் உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்படாதவாறே வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் முதன்முறையாக உவர் நீர் மீன்வளர்ப்பு திட்டத்தினை ஆரம்பிக்கும் வகையில் மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியம் -இலங்கை இணைந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இதற்கான ஆரம்ப பணிகள் மட்டக்களப்பு,கிரான்குளம் தர்மபுரம் பகுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீன்பிடி கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் மற்றும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உபாலி மொஹோட்டி உட்பட அமைச்சின் அதிகாரிகள்,ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மீன்பிடி கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் 142மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் திட்டத்தின் கீழ் இந்த உவர் நீர் மீன்குஞ்சுகள் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

தர்மபுரம் கடற்கரையினை அண்டியதாக அமைக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கு கடலில் இருந்து கால்வாய்கள் அமைக்கப்பட்டு குஞ்சுகள் உற்பத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கையில் முதன்முறையாக உவர் மீன்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் இருந்து பெருமளவான மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியும் என இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உபாலி மொஹோட்டி தெரிவித்தார்.