ஊறணியில் அழுகிய நிலையில் ஆணில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.

சுமார் 36வயது மதிக்கத்தக்க ஆண் என்றும் சடலம் அழுகி உருக்குலைந்த நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.