வவுணதீவு காட்டில் யானையின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பன்சேனை பகுதியில் உள்ள காட்டில் உயிரிழந்த நிலையில் சுமார் 18வயது நிரம்பிய ஆண் யானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் பன்சேனை பகுதியின் நாவலடிப்பள்ளம் என்னும் காட்டுப்பகுதியிலேயே குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த காலத்தில் இப்பகுதியில் யானையின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் குறித்த யானை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யானைகளின் தாக்குதல்கள் காரணமாக இப்பகுதி தொடர்ச்சியான இழப்புகளை எதிர்கொண்டுவந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொக்கட்டிச்சோலை பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் அப்பகுதிக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதனைத்தொடர்ந்து யானையின் சடலம் அப்புறப்படுத்தப்படும் எனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.