பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தேவாலயத்தில் நத்தார் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


கொழும்பு குற்றப்புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த இரண்டாம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்ல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரதிப்மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகியோரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.