ரி.வி.பி.பொதுச்செயலாளர் பிரசாந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இரட்டைக்கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூபாலபிள்ளை ஹரன் ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இன்று இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் டிசம்பர் 29ம் திகதி வரை அவர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி பாடசாலை ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்குமூலத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.