மட்டக்களப்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின்போது 250 புதிய முறைப்பாடுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவுகளுக்காக களுவாஞ்சிகுடியில் நடாத்தப்பட்ட காணாமல்போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின்போது 250க்கும் மேற்பட்ட புதிய முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.


காணாமல்போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது அமர்வில் இரண்டாம் நாள் விசாரணைகள் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றுவருகின்றது.

இன்று காலை ஒன்பது மணி தொடக்கம் இந்த அமர்வு நடைபெற்றுவருவதுடன் ஆணைக்குழு முன்பாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் சாட்சியங்களை அளித்துவருகின்றனர்.

இன்று 315பேர் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்தே இவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் முன்னதாக இயங்கிவரும் இந்தக் குழுவில் நீதியமைச்சின் சட்ட வரைஞர் திணைக்கள முன்னாள் பிரதி சட்ட வரைஞரும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணையாளருமான மனோகரி ராமநாதன், குடிசன மதிப்பீட்டு புள்ளிவிவரத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரீ.வி. பிரியந்தி சுரஞ்சனா வித்யாரெத்ன ஆகியோரடங்கிய குழுவினர் காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று மாலை 5.00மணி வரையில் இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளதுடன் நாளை வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் விசாரணைகள் நடைபெறவுள்ளது.

இதேவேளை களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லவெளி பிரதேச செயலகப்பிரிவுகளில் இருந்து நேற்று சனிக்கிழமை 153 புதிய முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 12 மணி வரையில் 70 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாககாணாமல்போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.