சமூகசேவைகள் உத்தியோகத்தர் படுகொலையை கண்டித்தும் குற்றவாளிகளை கைதுசெய்ய கோரியும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மண்டூரில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு தண்டனை வழங்குவதன் மூலமே பொதுமக்களிடையேயும் அரச உத்தியோகத்தர்கள் மத்தியிலும் உள்ள அச்சநிலையினை போக்கமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ள மகஜரிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூரில் உள்ள வீட்டில் வைத்து நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் குற்றவாளிகளை விரைவாக கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் மற்றும் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பல்வேறு சுலோகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கொலையாளிகளை கண்டுபிடிங்கள், கொலையாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்குங்கள்,அமைதியான சூழலை ஏற்படுத்துங்கள்,நீதியினை நிலைநாட்டுகள் போன்ற சுலோகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இறுதியாக சமூக சேவைகள் உத்தியோகத்தரின் படுகொலையினை கண்டித்தும் நடவடிக்கையெடுக்க வலிறுத்தியும் ஜனாதிபதி மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர்கள் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் கையளிக்கப்பட்டது.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது சக உத்தியோகத்தரான சச்சிதானந்தம் மதிதயன் அவர்கள் 26-05-2015திகதி இனந்தெரியாத ஆயுததாரிகளினால் மண்டூரில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

குடும்பஸ்தரான இவர் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து சமூகசேவை உத்தியோகத்தராக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்களில் கடமையாற்றி தற்போது நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்தவேளையில் இந்த துக்ககரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.இச்சம்பவத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

நாட்டில் வன்செயல் ஓய்ந்து நல்லாட்சி நிலவும் இந்தவேளையில் இவ்வாறான ஒரு துப்பாக்கிசூடு நிகழ்ந்துள்ளது.மழை ஓய்ந்தும் தூவாணம் முடியவில்லை என்பதுபோல் இந்நிலை காணப்படுகின்றது.

எனவே இவ்வாறான குற்றவாளிகளை வளரவிடாது உடனடியாக கொலைக்கான காரணத்தினையும் சூத்திரதாரிகளையும் கண்டுபிடித்து தண்டனை வழங்குவதன் மூலம் நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதுடன் அரசாங்க உத்தியோகத்தர்கள் இடையிலும் பொதுமக்கள் இடையிலும் காணப்படும் பீதியை தடுத்து நிறுத்த உதவுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.