பெண்கள் சிறுவர்களுக்கெதிரான துஸ்பிரயோகங்களுக்கு எதிராக நீதி வழங்க தனியான நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் - பூ.பிரசாந்தன்

சமூகத்தின் அடிமட்ட சீர்கேடாக உள்ள சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை விசாரணை செய்வதற்கு மாவட்ட ரீதியாக தனியான நீதிமன்றகள் உருவாக்கப்படுவதுடன் பெண்கள் சிறுவர்களுக்கெதிரான துஸ்பிரயோகங்களுக்கு புதிதாக கடுமையான சட்டங்கள் உருவாக்கக்கப்படவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிக்ள கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொடூரக் கொலை தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் கட்டவிழ்த்து விடப்பட்டு கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறை தொடங்கி அலுவலகங்கள், போக்குவரத்து அரசியல் பாடசாலைகளுக்கு உள்ளேயும்,

வெளியே என நீண்டு கொண்டே செல்கின்றது. திருமணம் செய்வதும் பின்னர் விவாகரத்துக் கோருவதும் என நாளாந்தம் நீதிமன்றத்தில் ஜீவணாம்சம் கோரும் பெண்களின் வழக்குகளும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதற்கெல்லாம் காரணம் சட்டங்கள் கடுமையாக்கப்படாததும், உரிய காலத்தில் தீர்ப்பு வழங்கப்படாமையுமே ஆகும்.

ஒரு பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றம் செல்வாரானால் வாயிதா வாயிதா என்றும் விசாரணை என்றும் வருடக்கணக்கில் இழுபறிபட்டு பொலிஸீக்கும் நீதிமன்றத்திற்க்குமாக குறித்த பெண் அலைந்து அலைந்து அலுப்படைவதும், பணம் படைத்த எதிராளியானால் பிரபல்யமான வழக்கறிஞர்களை வைத்து தனது சாதுரியத்தால் தீர்ப்பில் இருந்து தப்பித்து கொள்வதும், மேலதிகமாக மேல் நீதிமன்றங்களுக்கு விண்ணப்பித்து மீண்டும் பல வருடங்களையும் பணத்தினையும் வீண் விரயம் செய்து உடலால் பாதிக்கப்பட்ட பெண் மனதாலும் பாதிக்கப்படாமல் ஒதுங்கிக் கொள்வதும் இதனால் காமுகர்கள், குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதும் சாதாரணமாகிவிட்டது.

சிறுவர்களுக்கெதிரான துஸ்பிரயோகம் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தால் சிறுவர் பெரியவராகிய பின்னும் உரிய தீர்ப்பு கிடைக்காமல் வழக்கு தொடர்கின்ற, எத்தனையோ சந்தர்ப்பங்கள் உண்டு. அது நீதிமன்றத்தின் தவறோ அல்லது பொலிசாரின் தவறோ அல்ல நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளில் பெண்கள், சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளும் ஓர் வழக்கு. அதனைத் தாண்டி எத்தனையோ குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பெரும்பான்மையாக பதிவு செய்யப்படுவதனால் பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறை வழக்குகளும் பத்தோடு பதினொன்றாக உள்ளது.

இதனை மாற்றி சமுகத்தின் அடிமட்ட சீர்கேடாக உள்ள சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை விசாரணை செய்வதற்கு மாவட்ட ரீதியாக தனியான நீதிமன்றகள் உருவாக்கப்படுவதுடன் பெண்கள் சிறுவர்களுக்கெதிரான துஸ்பிரயோகங்களுக்கு புதிதாக கடுமையான சட்டங்கள் உருவாக்கக்கப்படவேண்டும்.அத்தோடு தீர்ப்புக்களும் மிக விரைவாக 03-06 மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.

யாழ் புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவின் மீதான கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் கொலை தொடர்பான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. வடக்கில் அதிகரித்து வரும் மாணவிகளுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்க அரசு மிகத் துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றவாளிகளுக்கு அதி உச்சமான தண்டனை வழங்கப்படுவதுடன் தொடர்ந்தும் குற்றச் செயல்கள் நடைபெறாவண்ணம் விழிப்ப+ட்டல் நடவடிக்கைகளை சமுகம் சார்ந்த அமைப்புக்களும் மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும்;.

மிகத் கொடுரமாக நடைபெற்ற மாணவி வித்தியாவின் கொலையானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தினையும் மனவேதனையினையும் ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று ஒரு வித்தியாவுக்கோ, ஒரு கிருஷாந்திக்கோ மாத்திரம் இவ்வாறான வன்முறைகள் நடைபெறவில்லை. ஒவ்வொரு நாளும் இலங்கையில் வித்தியா போன்ற எத்தனையோ வித்தியாக்கள் உடலாலும், மனதாலும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

அவற்றை தடுக்க அரசு முன்வரவேண்டும் தேர்தலுக்கும் ஆட்சி மாற்றங்களுக்கும் கொள்ளை வகுத்து நிறைவேற்றும் நாடாளுமன்றம் உலகின் மூலமாக, அடிக்கட்டுமானமாக உள்ள சிறுவர்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும் ஏனைய அரபு நாடுகளைப்போல் உடன் தீர்ப்பு வழங்க வேண்டும் என மக்கள் கொதித்துப் போயுள்ளார்கள் என்றால் மக்களின் மனதில் மாணவி வித்தியாவின் கொலை எவ்வளவு வன்மத்தினையும் பாதிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது என்பதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

கொலைக்கு கொலை தீர்ப்பாக அமைந்துவிடாது என வியாக்கியானம் பேசும் பலரும் அவர்கள் சார்பான கருத்துக்களை தெரியப்படுத்திக் கொண்டே இருந்தாலும் குற்றச் செயல்களை தடுக்க வேண்டுமானாலும் எதிர்காலத்தில் குற்றச் செயல்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானாலும் சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும் தீர்ப்புக்களும் துரிதப்படுத்தப்படவேண்டும் சட்டத்தின் மீது மக்களுக்கு பூரண நம்பிக்கை ஏற்பட வேண்டும் தீர்ப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாதவிடத்து மக்களினால் அகிம்சை போராட்ட சூழல்கள் உக்கிரம் அடைந்து மேலும் மக்கள் சட்டத்தினை கையில் எடுக்கும் நிலை உருவானால் அதனை ஈடுகொடுக்கும் நிலை மீண்டும் யுத்த நிலையாக மாறிவிடும் இதனைத் தடுத்து வித்தியாவின் மரணத்திற்கு உரிய கடுமையான தீர்ப்பு வழங்கப்படுவதுடன் பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்தும் ஏற்படாமல் தடுக்க புதிய கடுமையான சட்டங்களும் தனியாக நீதிமன்றங்களும் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக பெண்கள் சார்ந்த அமைப்புக்களும் நலன் விரும்பிகளும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.