சமூகத்தில் உயர் சிந்தனைகள் விதைக்கப்படும்போதே சிறந்த வெளியீடாக பார்க்கின்றோம் - இணைப்பாளர் ஜெயபாலன்

உயர் கல்வி நிலையங்களில் இருந்து வெளியேறிச்செல்லும் மாணவர்கள் உயர் நிலைகளுக்கு செல்லும்போது அங்கு நல்ல சிந்தனைகள் விதைக்கப்பட்டு நல்ல விழுமியங்கள் பாதுகாக்கப்படுகின்ற நிலைமை உருவாகுமானால் அதனையே நாங்கள் சிறந்த வெளியீடாக பார்க்கின்றோம் என மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பட கல்வி நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு ஆரையம்பதி,கோவில்குளத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பட கல்வி நிறுவகத்தின் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பட கல்வி நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பட கல்வி நிறுவகத்தின் உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் ஒன்றியம் மற்றும் உயர் கணக்கியல் டிப்ளோமா இரண்டாம்ஆண்டு முழு நேர பாடநெறியை மேற்கொள்ளும் மாணவர்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தனர்.

இதன்போது பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் மூவினங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்று நேபாள நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் இடம்பெற்றுள்ளது.இதில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலிகொள்ளப்பட்டுள்ளது.இந்தவேளையில் அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஒரு அனர்த்தம் வரும்போது ஒரு மதத்துக்கோ,இனத்துக்கோ,ஒரு சமூகத்துக்கோ வருவதில்லை.இந்த நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது யாரும் நான் தமிழன்,நான் முஸ்லிம்,நான் சிங்ளவன்,நான் இராணுவம்,நான் விடுதலைப்புலி என எண்ணவில்லை.மனிதன் என்ற எண்ணத்தினை தவிர அந்த நிலைமையில் வேறு எதுவும் அங்கு ஏற்படவில்லை.நாங்கள் இதனை நேரடியாக அனுபவித்தோம்.

அந்த சுனாமி இடம்பெற்றவேளையில் உண்மையான அன்பு,காருண்யம்,மனிதனுக்கு உதவிசெய்யவேண்டும்,எப்படியாவது மனிதனை காப்பாற்றவேண்டும் என்ற எண்ணமே இருந்தது.அந்தவேளையில் எந்தவிதமான கீழான எண்ணங்களையும் காணமுடியாத நிலையே இருந்தது.அனைவரும் அந்தவேளையில் ஒன்றுபட்டிருந்தார்கள்.

ஆனால் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின்னர் நிவாரணப்பொருட்கள் கொண்டுவரப்பட்டபோது அங்கிருந்தவர்கள் குழுக்களை ஆரம்பித்து நிவாரணத்திற்கு முண்டியடித்தபோது அங்கிருந்த மனிதம் மறைந்துசென்றது.இதனை கண்டு நான் மிகவும் கவலையடைந்தேன்.

உண்மையில் நாங்கள் எங்கு பிரச்சினையை உருவாக்கிக்கொள்கின்றோம்.எங்கு நாங்கள் மனிதம்,கருணைக்கு அப்பால்பட்டு செயற்படுகின்றோம் என்றால் எங்களுக்கு கஸ்டம் வரும்போது,இன்னுமொருவரை கஸ்டப்படுத்தும்போது மனித உணர்வுகளை விலக்கி நிற்கின்றோம்.

இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்த மாணவர்களிடையே எந்தவித வேறுபாட்டினையும் நான் காணவில்லை.கீழான சிந்தனையையோ வித்தியாசமான போக்கினை நான் இங்கு காணவில்லை.

அனைத்து மாணவர்கள் மதம் இனத்துக்கு அப்பால் இந்த நிகழ்வினை வெற்றிகரமாக நடாத்தவேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தார்கள்.அதன் நோக்கத்திலேயே அவர்கள் ஒன்றுபட்டு செயற்படுகின்றனர்.இவ்வாறான ஒற்றுமையே இன்று எமது பிரதேசத்துக்கும் தேவைப்படுகின்றது.

இங்கு 730க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.இவர்கள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் வேறு ஒரு நிறுவனத்தில் உயர் நிலைக்கு செல்லும்போது அங்கு நல்ல சிந்தனைகள் விதைக்கப்பட்டு நல்ல விழுமியங்கள் பாதுகாக்கப்படுகின்ற நிலைமை உருவாகுமானால் அதனையே நாங்கள் சிறந்த வெளியீடாக பார்க்கின்றோம்.