சிறுபான்மை சமூகத்துக்கு பாதிப்பில்லாத வகையில் தேர்தல் முறை மாற்றப்படவேண்டும் -பூ.பிரசாந்தன்

சிறுபான்மை சமுகத்திற்கு பாதிப்பில்லாத தேர்தல் முறைமையினையே நாம் விரும்புகின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.


20வது தேர்தல் திருத்தம் சட்டமூலம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இப்பொழுதுள்ள விகிதாசார தேர்தல் முறை என்பது குறித்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக கருத்துக்களை பிரதிபலிப்பதாக அமைந்தாலும் அதிலுள்ள விருப்பு வாக்கு முறை என்பது பல சர்ச்சைகளை கட்சிகளுக்குள்ளும் மக்களிடையேயும் தோற்றுவிப்பதனை யாரும் மறுக்க முடியாது அத்தோடு பல தொகுதிகளுக்கான மக்கள் பிரதி நிதிகள் இல்லாமல் போகும் நிலையும் தொடர்ந்து மக்களால் சுட்டிக் காட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக மட்டக்களப்பு தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக காணப்படும் போதும் 2010ம் வருடம் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்படவில்லை கல்குடாவுக்கும் பட்டிருப்புத் தொகுதிகளுக்குமே மக்கள் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பட்டது.

இவ்வாறான சூழல்கள் வரும்போது மக்களின் அடிமட்ட தேவைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துச் செல்வதற்கான மக்கள் பிரதிநிதிகளின் பிரசன்னம் இல்லாது போகின்றது. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு தொகுதி ரீதியான மக்கள் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதோடு சிறுபாண்மைக் கட்சிகளும், சிறுபான்மை மக்களும், பாதிக்கப்படாத சிறுபாண்மையினாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தான தேர்தல் முறையினையே நாம் எதிர்பார்க்கின்றோம்.

புதிய தேர்தல் வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அது தொடர்பாக ஆராய்ந்து முன் மொழிவுகள் செய்யவும் எமது கட்சி தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.