மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி சம்பூர் பிரதேச மக்கள் தீபங்கள் ஏற்றி விசேட பிரார்த்தனை

கிழக்கு மாகாணத்தில்  திருகோணமலை மாவட்டத்திலுள்ள  சம்பூர் பிரதேச மக்கள்  விரைவான மீள்குடியேற்றத்திற்காக இன்று இரவு தீபங்களை ஏற்றி விசேட பிராத்தனையில் ஈடுபட்டார்கள்.


தமது சொந்த மண்ணிலிருந்து வெளியேறி 9வது ஆண்டு இன்றுடன் நிறைவடையும் நிலையில் இந்த பிராத்தனை யில் அவர்கள் ஈடுபட்டனர்.

அவர்கள் தற்காலிகமாக தங்கியுள்ள கிளிவெட்டி , கட்டப்பறிச்சான்  உடபட இடைத்தங்கல் முகாம்களுக்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரனும் கலந்து கொண்டார்.

2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி அவ்வேளை இராணுவ தளபதியாகவிருந்த ஜெனரல் சரத் பொன்சேகா கொழும்பில் விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல்க்குள்ளானார்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக  அன்றிரவு  கிழக்கு மகாணத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டிலிருந்த சம்பூர்  பிரதேசத்தில்  விமான தாக்குதல்கள் இடம் பெற்றிருந்தன.

இதனையடுத்து மறுநாள்  சம்பூர்  பிரதேச மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாட்டில் தற்போது யுத்தம் முடிவடைந்து 5 வருடங்களாகி விட்ட போதிலும்  சம்பூர்  பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.

அந்த பிரதேச மக்களின் குடியிருப்பு காணிகளும் . வயல் நிலங்களும் அரச முதலீட்டு ஊக்குவிப்பு  வலயம் , கடற்படை உயர் பாதுகாப்பு பிரதேசம் மற்றும் இந்திய அனல் மின் உற்பத்தி நிலையம் என  கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் அடையாளமிடப்பட்டு விஷேட வர்த்தமானி பிரகடனம் மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சொந்த நிலத்தில் மீள்குடியேற்றம் தடைப்பட்டுள்ள நிலையில் அந்த பிரதேச மக்கள் தொடர்ந்தும் தற்காலிக இடைத்தங்கல் மையங்களில் தங்கியுள்ளார்கள்.

புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில் குறித்த காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

முதல் தொகுதியில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு என அடையாளமிடப்பட்ட 818 ஏக்கர் விடுவிக்கப்பட்டு  அந்த பகுதியில்  இந்த மாதம் நிறைவடைய முன்பு மீள்குடியேற்றம் நடைபெறும் என மீள்குடியெற்ற  அமைச்சினால் உறுதிமொழியும் உத்தரவாதமும் அளிக்கப்பட்டு ஒரு மாதமாகிவிட்ட போதிலும் இதுவரை மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை என்பதும் இங்கு  குறிப்பிடத்தக்கது.