மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரி மட்டக்களப்பு நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட பெருமளவு தமிழ், முஸ்லிம் விவசாயிகள் கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான குளங்களில் ஒன்றான உறுகாமம் குளத்திலிருந்து நீர்ப்பாசன வசதியைப் பெறும் விவசாயிகள், குறித்த குளத்திலிருந்து  நீரை வழங்காமையால் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரியாவெளி, தளவாய், பூமாச்சோலை, கரடியனாறு, பவளவெட்டுவான் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த 500 விவசாய குடும்பங்களும் 1500 விவசாய தொழிலாளர்களும் சிறுபோக நெற்செய்கை தடை செய்யப்பட்டுள்ளதால் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

1420 ஏக்கரில் செய்கை பண்ணப்படும் சிறுபோக நெற்செய்கை இதனால் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு குறித்த உறுகாமம் குளத்தில் நீர்மட்டம் 8 அடியாக இருந்தபோது சிறுபோக விவசாய செய்கைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது 16 அடியாக நீர்மட்டம் காணப்படுகின்றபோதும், சிறுபோக செய்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்தாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆர்பப்பாட்டத்தின் முடிவில் ஜனாதிபதி மற்றும் நீர்பாசன அமைச்சர் ஆகியோருக்கு மகஜர்களையும் அனுப்பி வைத்தனர்.