கொக்கட்டிச்சோலை தனியார் பஸ் உரிமையாளர்கள் ஊழியர்கள் சேவைகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் தமது சேவைக்கு இடையூறை ஏற்படுத்துவதைக்கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டத்தினையும் மேற்கொண்டனர்.


இன்று வெள்ளிக்கிழமை காலை பட்டிப்பளை பொது விளையாட்டு மைதானத்தில் தமது பஸ் வண்டிகளை நிறுத்திவைத்து இந்த போராட்டத்தில் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கொக்கட்டிச்சோலையில் இருந்து மட்டக்களப்புக்கு சேவையில் ஈடுபடும் சுமார் 25க்கும் மேற்பட்ட பஸ் உரிமையாளர்கள்,ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.

கொக்கட்டிச்சோலை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள தமது சேவையினை அம்பிளாந்துறை வரை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கையினை உரிய தரப்பினர் மேற்கொள்ளவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.மிக முக்கியமாக இப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் காத்தான்குடி இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் நேர அட்டவணையின்றி தங்கள் விருப்பத்திற்கேற்றாற்போல் சேவையில் ஈடுபடுவதன் காரணமாக தம்மால் சேவையினை முறையாக நடாத்தமுடியாத நிலையேற்பட்டுவருவதாகவும் இங்கு கவலை தெரிவித்தனர்.

மண்முனை பாலம் அமைப்பதற்கு முன்னர் மண்முனையில் இருந்து மட்டக்களப்பு வரையில் தனியார் பஸ்கள் மட்டுமே பொதுமக்களுக்கு சேவை வழங்கிவந்தது.எப்போதாவது ஒரு தரமே இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையினை வழங்கும்.

ஆனால் பாலம் அமைக்கப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியான சேவையினை வழங்கி எமக்கு பாரிய அநீதியை இழைத்துவருகின்றனர்.ஒரு நேர அட்டவணையினை இரு தரப்பினரும் இணைந்து செயற்படுத்தவேண்டும்.அது தொடர்பில் நாங்கள் கோரிக்கை விடுத்தும் அது இலங்கை போக்குவரத்துசபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் இதன் காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்கொள்வதாகம் தினமும் 200ரூபா தொடக்கம் 300ரூபா வரையான சம்பளமே தமக்கு கிடைப்பதாகவும் அதனைவிட பஸ் உரிமையாளர்கள் கடும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் தமது பஸ்ஸை திருத்துவதற்கு கூட பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும் இதன்போது தமது கவலையை தெரிவித்தனர்.இதற்கு தமக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தொடர்ச்சியாக தாம் இந்த பகிஸ்கரிப்பு போராட்டத்தினை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை பஸ்களின் செயற்பாடுகள் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்றை பட்டிப்பளை தனியார் பஸ் சங்கத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.